Sep 20, 2013

மினரல் வாட்டர் கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிமுறை மீறி இயங்கிய, மினரல் வாட்டர் கம்பெனிக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தம்மம்பட்டியில், மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில், சிங்காரவேல், கோவிந்தராஜ், முனுசாமி, ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, துறையூர் சாலையில், நல்லு என்பவருக்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி, முறையான அனுமதி பெறாமல், விதிமுறை மீறி, வாட்டர் கேன்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
அதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமன அலுவலர் அனுராதா, மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் நல்லுவிடம், "ஒரு வாரத்துக்குள், கம்பெனியை மூட வேண்டும்' என, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த, 20 லிட்டர் வாட்டர் கேன்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உலிபுரம், நாகியம்பட்டி, ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில், பான்பராக், குட்கா உள்ளதா என சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்கு வைத்திருந்த, நூற்றுக்கும் மேற்பட்ட காலாவதியான குளிர்பான பாட்டில்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.