Sep 3, 2017

ஆத்தூரில் சமையல் ஆயில் ஆலைக்கு 'சீல்': 28 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்

ஆத்தூர்: ஆத்தூரில், கலப்பட சமையல் எண்ணெய் தயாரித்த ஆலைக்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியில் கலப்பட எண்ணெய் தயாரித்து விற்பதாக, கலெக்டர் ரோகிணிக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, நேற்று, இரவு, 7:00 மணிக்கு, தாசில்தார் கேசவன், துணை தாசில்தார் ஜீவானந்தம், ஆர்.ஐ., கண்ணையன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில், 'திவ்யா டிரேடர்ஸ்' ஆயில் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, மூன்று டேங்கரில், 28 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பதுக்கியதும், அதன் உரிமையாளர் நடேசன், 55, என்பதும் தெரியவந்தது. சூரிய காந்தி, கடலை, எள் மூலம் தயார் செய்த எண்ணெய் என, கேன்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான, 28 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய்யை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே குடோனில், இருந்த தரமற்ற, 3,600 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். தாசில்தார் கேசவன் கூறுகையில், ''அனுமதி பெறாத இடத்தில், வாசனை, நிறம் இல்லாத கலப்பட ஆயில் பதுக்கி வைத்திருந்ததால், ஆலைக்கு சீல் வைத்தோம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

1 comment: